×

அவரையில் காய்ப்புழு தாக்குதலை தடுக்க வேளாண்துறை ஆலோசனை

 

ஆண்டிபட்டி, அக். 25: அவரையில் காய்ப்புழு நோய் தாக்குதல் ஏற்பட்டால் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். தேனி மாவட்ட கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இந்த கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், அவரை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக அவரை சாகுபடி அதிகளவு நடந்து வருகிறது. தற்போது அவரை செடிகளில் காய்ப்புழுத் தாக்குதல் ஏற்பட்டு, செடியிலேயே காய்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நோய் தாக்குதல் தடுப்பது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘காய்ப்புழுத் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் குளோரி பைரிபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவிலும், தாக்குதல் அதிக அளவு இருந்தால் டிசைடர் மருந்து 1 லிட்டருக்கு 1 மில்லி கலந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தெளிக்க வேண்டும். தாக்குதல் புழுவின் பரிணாமம் முட்டை, புழு என பல்வேறு கட்டங்களாக இருப்பதால் லார்வின் மருந்தை 10 லிட்டர் நீருக்கு 20 கிராம் கலந்து தெளித்து வந்தால், இந்நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்’’ என்றார்.

The post அவரையில் காய்ப்புழு தாக்குதலை தடுக்க வேளாண்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...