![]()
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறியது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் திசை மாறுபாடுகாரணமாக அந்த புயல் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று நேற்று இரவு மியான்மர் அருகி்ல் நிலை கொண்டது. இன்று மாலையில் அது மேலும் வலுப்பெற்று சிபுபுரா- சிட்டகாங் வழியாக வங்க தேசம் வழியாக வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல அரபிக் கடல் பகுதியல் உருவான புயல் ஏமனில் நேற்று கரையைக் கடந்தது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. இதற்கிடையே, ஈரோடு, கரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பநிலை உணரப்பட்டது. சென்னை, கோவை, தர்மபுரி, மதுரை, நாகப்பட்டினம், திருச்சி, ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உணரப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், வட கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post தமிழ்நாடு, புதுவையில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
