×

மாமல்லபுரம் குதிரை ஓட்டி கொலை வழக்கு சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததை உரிமையாளரிடம் காட்டி கொடுத்ததால் கொன்றோம்: கைதான நண்பர்கள் வாக்குமூலம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், குதிரை ஓட்டியை கொலை வழக்கில், ‘சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலத்ததை குதிரை உரிமையாளரிடம் கூறியதால், வெட்டி கொன்றோம்’ என சக குதிரை ஓட்டி நண்பர்கள் 4 பேர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரூபன் (எ) உடும்பன் (23). குதிரை ஓட்டியான இவர் மாமல்லபுரம் குதிரைக்கார தெருவில் உள்ள ஒருவரிடம் குதிரையை வாங்கி தினமும் சுற்றுலாப் பயணிகளுக்கு சவாரி ஓட்டியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில், மணலில் தலை புதைந்தநிலையில் தலை, முகம், கைகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ரூபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், குதிரை சவாரி ஏற்றுவதில் அதிக கட்டணம் வசூப்பதை குதிரை உரிமையாளரிடம் காட்டி கொடுத்ததாலும், பயணிகளிடம் சவாரி பிடிக்க குறைந்த கட்டணம் வாங்குவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவும், சக குதிரை ஓட்டிகள் ரூபனை வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலுக்கு அருகே உள்ள ஒரு முட்புதரில் சந்தேகத்திற்கிடமாக ஒரு கும்பல் குடித்துவிட்டு ரகளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து 4 பேரை மடக்கி, பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மாமல்லபுரத்தை சேர்ந்த பாலாஜி (24), சதீஷ்குமார் (23), பட்டிப்புலம் குப்பத்தை சேர்ந்த அருளேஷ் (20), கார்த்திக் (20) என்பது தெரிய வந்தது.

மேலும், அவர்கள், குதிரை சவாரி ஏற்றுவதில் அதிக கட்டணம் வசூப்பதை குதிரை உரிமையாளரிடம் காட்டி கொடுத்ததாலும், பயணிகளிடம் சவாரி பிடிக்க குறைந்த கட்டணம் வாங்குவதாலும், ரூபனை நாங்கள் தான் வெட்டிக் கொலை செய்தோம் என, போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்து, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மாமல்லபுரம் குதிரை ஓட்டி கொலை வழக்கு சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததை உரிமையாளரிடம் காட்டி கொடுத்ததால் கொன்றோம்: கைதான நண்பர்கள் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்