×

வில்லிவாக்கம் பகுதிகளில் போதைபொருள் விற்ற 2 சகோதரர்கள் கைது: 141 கிலோ குட்கா பறிமுதல்

அம்பத்தூர்: வில்லிவாக்கம் பகுதிகளில் குட்கா மற்றும் போதை பொருட்களைப் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 141 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், ரூ.24 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, கஞ்சா உள்பட பல்வேறு போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக, புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கையை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் முடுக்கி விட்டுள்ளார். இதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தி, பதுக்கி விற்பனை செய்பவர்களை கைது செய்வதுடன், அவற்றை பறிமுதல் செய்து, அவர்களின் வங்கி, பணபரிமாற்றங்களை முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வில்லிவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். வில்லிவாக்கத்தில் சந்தேக நிலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர்களின் பைகளில் குட்கா பொருட்களை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அம்பத்தூரை சேர்ந்த சகோதரர்களான அப்பாஸ் (40), அப்துல் சமீது (42) எனத் தெரியவந்தது. அவர்கள் ஆந்திராவில் குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தி வந்து, வீட்டுக்குள் பதுக்கி வைத்து, கடைகளுக்கு சில்லறை விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சகோதரர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 141 கிலோ குட்கா போதைபொருள் மற்றும் ₹24 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வில்லிவாக்கம் பகுதிகளில் போதைபொருள் விற்ற 2 சகோதரர்கள் கைது: 141 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Villivakkam ,Ampathur ,Dinakaran ,
× RELATED ராஜமங்கலம் பகுதியில் ரவுடி கொலை...