×

வாழை இலை அறுத்தபோது கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி: மனைவி கண்ணெதிரே பரிதாபம்

 

குன்றத்தூர், அக்.23: குன்றத்தூர், பாபு நகர், 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு (47), கூலி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (40). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள வாழை மரங்களில் காய்ந்த சருகுகளை அகற்றும் பணியில் பாபுவும், அவரது மனைவி தேன்மொழியும் ஈடுபட்டனர். அப்போது, மரத்தில் இருந்து அகற்றிய சருகுகளை தேன்மொழி எடுத்துச் சென்று குப்பையில் போட்டுவிட்டு வந்தபோது, மரத்தில் அருகில் உள்ள கிணற்றில் பாபு தவறி விழுந்தது தெரிந்தது. அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

உடனடியாக இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கும், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 40 அடி ஆழ கிணற்றில் இறங்கி, பாபுவை சடலமாக மீட்டனர். பின்னர், சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கிணற்று உறையில் நின்று கொண்டு பாபு வாழை இலைகளை அறுத்து சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றின் உள்ளே விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

The post வாழை இலை அறுத்தபோது கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி: மனைவி கண்ணெதிரே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Kannetree ,Gunratur ,Babu ,1st cross street ,Kunrathur ,Babu Nagar ,Kannetree Pity ,
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...