சென்னை: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: `செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதையும்; `உழைப்பின் மூலமே வெற்றி’ என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் மக்கள் அனைவரது வாழ்விலும் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்க வாழ்த்துகள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதிய சாதனைகள் படைப்பதற்கான பணிகளை இந்நாளில் தொடங்கிடுவோம். தீய சக்தியை அழித்து துர்கா தேவி பெற்ற வெற்றியைக் குறிக்கும் இந்த தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழிலில் முன்னேற்றங்கள் காணவும், இறைவன் அருள் புரியட்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: அறிவை தரும் கல்வி நம் வாழ்கை முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அந்த கல்வியையும், பண்பாடு, காலச்சாரம், ஞானம், இசை, அறிவு போன்றவற்றை வழங்கும் சரஸ்வதி தேவியை போற்றி வணங்குகிறோம். அறிவை தரும் கல்வியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும், வளத்தையும் தரும் இயந்திரங்களை போற்றி வணங்கும் இந்த நன்னாளில், அனைவரும் சரஸ்வதிதேவியின் அருளை பெற்று, கல்வியிலும், தொழில்துறையிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள். அண்ணாமலை (பாஜ தலைவர்): தமிழக மக்கள் அனைவரும் தங்கள் தொழிலில் உயர்வும், மேன்மையும், கல்வியில் பெருமையும் வளமையும், வாழ்கின்ற வாழ்க்கையில் முழுமையும், வெற்றியும் அடைந்து மகிழ்ச்சியோடு வாழ, தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற இந்த விழாக்கள் வழிவகுக்கட்டும். அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், நமது உரிமை காக்கும் கட்சி நிறுவன பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன், சமத்துவ மக்கள் கழகம் எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்க தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
The post ஆயுத பூஜை கொண்டாட்டம் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.