×

‘இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜ நடுங்குகிறது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: இந்தியாவை இந்தியா கூட்டணி மீட்கும். இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே பாஜ நடுங்குகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்தி பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இந்தியாவின் பெரிய, வலிமையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தும், மொழி, மதம், சில திட்டங்கள் என எப்போதும் வடக்குடன் உரசலில் இருந்து வருவதாகத் தோன்றுவதன் காரணம் என்ன? தமிழ்நாடு வலிமை மிகுந்த மாநிலம் என்பது உண்மை. நாங்கள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத் தத்துவத்தை கொண்டவர்கள். எங்கள் தாய்மொழி தமிழ், இந்தியாவின் முதல் செம்மொழித் தகுதியைப் பெற்றது. தமிழ்நாட்டில் தமிழைத் தாழ்த்தி, இந்தியைத் திணிக்க முயன்றால், அதனை எப்போதும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதே நேரத்தில், வடமாநிலங்களும், அவரவர் தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

உங்கள் கட்சி இந்திக்கு எதிரானதா? நாங்கள் இந்தி என்கிற மொழிக்கோ வேறு எந்தவொரு மொழிக்கோ எதிரானவர்கள் அல்ல. எங்கள் கட்சியை நிறுவிய அண்ணா, இதனை 1962லேயே மாநிலங்களவையில் விளக்கியிருக்கிறார். இந்தித் திணிப்பைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இன்று வங்காளம், மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளைக் காக்க நினைக்கும் மாநிலங்கள் அனைத்தும் இதே நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒன்றியம். இங்கே அவரவர் தாய்மொழிதான் பண்பாட்டின் உயிர்நாடி. அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, தமிழ்நாட்டில் தமிழ் – ஆங்கிலம் என்கிற இரு மொழிக் கொள்கைக்கான சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்திவிட்டார் அண்ணா. மூன்றாவது மொழி என்கிற சுமை ஏற்றப்படாத காரணத்தால், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக் குறியீடு உலகளாவிய குறியீடுகளுடன் ஒப்பிடக்கூடிய நிலையில் உள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை நிர்ணயித்துள்ள இலக்குகளைத் தமிழ்நாடு ஏற்கனவே கடந்து, இருமொழிக் கொள்கை வாயிலாக பல படிகள் முன்னேறியிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டிற்கேற்ற தனித்துவமான கல்விக் கொள்கை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.

அண்மையில், உங்கள் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து தெரிவித்த சில கருத்துகள் வட இந்தியாவில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அதில் உங்கள் நிலைப்பாடு என்ன? சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதை, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதாக பாஜவின் ஐடி விங் பொய்யாகப் பரப்பியது. அதே போல ‘ஜெனோசைட்’ என்ற சொல்லையும் உதயநிதி பயன்படுத்தவில்லை. பாஜ ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த சாதனையும் இல்லை. 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல்கள் தான் வெளிப்பட்டுள்ளன. இந்த ஊழல்களுக்கு பதில் சொல்ல முடியாத பாஜ அரசு ஊழல்களைச் சுட்டிக்காட்டிய சி.ஏ.ஜி. அதிகாரிகளை மாற்றி இருக்கிறது. இவற்றைத் திசைதிருப்ப உதயநிதி பேச்சை சர்ச்சையாக்கி உள்ளார்கள்.

சனாதனம் பற்றி உங்கள் மகன் தெரிவித்த கருத்துகளை அவர் திரும்பப் பெறவில்லை என்ற கருத்தே பொதுவாக உள்ளது. நீங்களும் இதுபற்றி விலாவாரியாக இதுகுறித்து பேசாமல் இருப்பதில் ஏதேனும் அரசியல் நலன் சம்பந்தப்பட்டுள்ளதா? எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் மதிப்பவர்கள். ஏற்றத்தாழ்வுகளை உறுதியாக எதிர்ப்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த 889 நாட்களில் 1000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். இரண்டரை ஆண்டுகாலத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளோம். கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி பணி நியமனம், பெண் அர்ச்சகர்கள் – பெண் ஓதுவார்கள் நியமனம் என இந்து மதக் கோயில்களை புனரமைத்து, பக்தர்களுக்கு வசதிகளைப் பெருக்கித் தந்திருக்கிறோம். தேரோட்டம் உள்ளிட்ட கோயில் விழாக்கள் அந்தந்த கோயில்களின் நடைமுறைப்படி நடத்தப்படுகின்றன. இதுதான் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் பார்வையாகவும் உள்ளது.

உங்கள் கட்சி இந்தியா கூட்டணியில் ஓர் அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சியினர் உங்கள் தலைவர்களிடம் சனாதனம் பற்றிப் பேசுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறார்கள். இருந்தும் உங்கள் கட்சியினர் அப்படி நடந்துகொள்வதாகத் தெரியவில்லையே? தோழமைக் கட்சியினரின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதிக்கின்ற இயக்கம் திமுக. அதனால் இது பற்றி உரிய விளக்கமும் தரப்பட்டு, அவர்களின் வேண்டுகோளும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை வைத்து, இந்தியா கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்று நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை. அண்மைக்காலங்களில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் இந்துத்துவத்தை வேறு சொற்களில் விமர்சித்துள்ளனர். 2024 தேர்தலின் மையப்பொருளாக ‘முற்பட்ட சாதிகள் எதிர் பிற்படுத்தப்பட்ட சாதிகள்’ என்பதை முன்னிறுத்த உங்கள் கூட்டணிக்கட்சியினர் முயல்வதாகக் கூறப்படுகிறது. அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

எந்த ஒரு சமுதாயத்தையும் இன்னொரு சமுதாயத்திற்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை நாங்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசில் பிரதமர் வி.பி.சிங், இதர பிற்படுத்த வகுப்பினருக்கு ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டினைக் கொண்டு வந்தார். அதன் எதிரொலியாக, வடமாநிலங்களில் சமூகநீதி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் இருந்த பல தலைவர்கள் அவரவர் மாநிலங்களுக்கான அரசியல் இயக்கத்தைத் தொடங்கினர். காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும், மாநிலங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், நாட்டின் வளர்ச்சியும் ஜனநாயகத் தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2024 தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்கொள்ளவிருக்கிறது. இலவசத் திட்டங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றமே கூட இதுபற்றி சில கருத்துகளைக் கூறியுள்ளது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இலவசம் என்று மலிவாக வரையறுக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு திட்டமும் சமூகநலத் திட்டங்கள்தான். அந்தத் திட்டங்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை அந்தந்தக் காலகட்டத்தில் மக்களை ஒரு படியேனும் மேலே உயர்த்துகின்றன. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வேளாண்குடிகளைக் காப்பாற்றியது, மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் ஒரு தலைமுறையின் பள்ளிக் கல்வியை நிறைவு செய்ய வைத்தது, பட்டதாரிகளுக்கான கட்டணமில்லாக் கல்வி, உயர்கல்வி கற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலையைக் கிடைக்கச் செய்தது. கலர் டி.வி, கேஸ் அடுப்பு போன்றவை பெண்கள் எந்நேரமும் அடுப்படியில் இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மீட்டு, வெளியுலகத்தைக் காணச் செய்தன. இவற்றை இலவசம் என்று சொல்வது தவறு. பிரதமர் மோடியே கூட, நீங்கள் குறிப்பிடும் இலவசத் திட்டங்கள் பலவற்றை அறிவித்திருக்கிறார்.

பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கியிருக்கிறீர்களே? குழந்தைகள் காலை உணவு சாப்பிட முடியாமல் பள்ளிக்கு வருவதை நான் சில பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து தெரிந்துகொண்டேன். சாப்பிடாமல் வரும்போது, பாடம் என்பது அவர்களுக்கு சுமையாக மாறிவிடுகிறது. களைப்பும் சோர்வும் ஏற்படுவதுடன், உடல்நலக் குறைபாடுகளும் உருவாகின்றன. எனவே, எதிர்காலத் தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக வளரவேண்டும், கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவுதான் காலை உணவுத்திட்டம். அதனால்தான் பிற மாநிலங்களும் தமிழ்நாட்டைப் பின்பற்றுகின்றன. பிரதமர் மோடியை எதிர்கொள்வதற்கு ஏற்ற வலிமையான தலைவராக உங்கள் இந்தியா கூட்டணியில் யாரைக் கூறுவீர்கள்? இந்தியாவை இந்தியா கூட்டணி மீட்கும். இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே நடுங்கும் நிலையில்தான் பாஜ இருக்கிறது. பிறகெதற்கு யார் வலிமையான போட்டியாளர் என்ற கேள்வி. இந்தியா கூட்டணி என்பது தலைவர்களும் கட்சிகளும் மட்டும் இடம்பெற்றுள்ள கூட்டணி அல்ல. இந்திய மக்களின் ஒருங்கிணைந்த கூட்டணி. அவர்கள், ஜனநாயக விரோத-மதவாத அரசியல் செய்யும் பா.ஜ.வை விரட்டும் வலிமை கொண்டவர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணியினரும் இந்திய மக்களும் தெளிவாகவே இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து இருந்தார்.

* இலவசம் என்று மலிவாக வரையறுக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு திட்டமும் சமூகநலத் திட்டங்கள்தான். அந்தத் திட்டங்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை அந்தந்தக் காலகட்டத்தில் மக்களை ஒரு படியேனும் மேலே உயர்த்துகின்றன.

The post ‘இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜ நடுங்குகிறது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,MLA K. ,Stalin ,Chennai ,India Alliance ,K. Stalin ,Chief Minister ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...