×

வெடி விபத்தில் பட்டாசு குடோன் தரைமட்டம்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (50). இவர் எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டாசு குடோன் வைத் துள்ளார். இன்று அதிகாலை 5 மணிக்கு பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு குடோனில் இருந்த வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் பென்னாகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் தரைமட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறமாக பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சமீப காலமாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்துள்ளதும், இந்த குடோனில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் பென்னாகரம் நீதிமன்றத்தில் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு பாதுகாத்து வந்ததும் தெரியவந்தது. இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெடி விபத்தில் பட்டாசு குடோன் தரைமட்டம் appeared first on Dinakaran.

Tags : Bennagaram ,Lakshmanan ,Krishnapuram ,Dharmapuri district ,MK Nagar ,
× RELATED இறந்த தாய்க்கு இறுதிச் சடங்கு...