சென்னை: ரவுடி குள்ள விஷ்வா (எ) விஷ்வநாதன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த குள்ள விஸ்வா (எ) விஸ்வநாதன் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி திருத்தணி அடுத்த திருப்பந்தியூர் மாந்தோப்பில் வைத்து விஸ்வா என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குள்ள விஸ்வா என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கை மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது தந்தை அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், தனது மகன் விஸ்வா செப்டம்பர் 16ம் தேதி திருத்தணியிலிருந்து காவல்துறையால் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டு, அன்று மாலையே திருப்பந்தியூர் மாந்தோப்பில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு எதிராக மப்பேடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
The post ரவுடி என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடி விசாரணை கோரி ஐகோர்ட்டில் தந்தை மனு: விரைவில் விசாரணை appeared first on Dinakaran.