×

அரசு அதிகாரி என்று கூறி ரூ.20 கோடி மோசடி விசிக பெண் நிர்வாகி சென்னையில் சிக்கினார்: புரோக்கர்கள் 2 பேரும் கைது

சேலம்: சேலத்தில் அரசு அதிகாரி எனக் கூறி, ரூ.20 கோடி மோசடி செய்த வழக்கில் விசிக பெண் நிர்வாகி சென்னையில் சிக்கினார். அவருக்கு புரோக்கர்களாக செயல்பட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் காயத்ரி(42). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி. இவர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகக் கூறி, பலரிடம் அரசின் நலத்திட்ட உதவி தொகை வாங்கி தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை நம்பி ஏராளமானோர், இவரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். இதுபற்றி சேலம் மத்திய குற்றப்பிரிவில் மட்டும், இவர் மீது 6க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், காயத்ரி மோசடி செய்த ரூ.20 கோடி பணத்துடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து காயத்ரியை கைது செய்ய, தனிப்படையை, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அமைத்தார்.

இதனிடையே, காயத்ரி சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டு காயத்ரியை தேடி வந்தனர். நேற்று முன்தினம், அங்குள்ள ஓட்டலில் காயத்ரியை அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு புரோக்கர்களாக செயல்பட்ட கார் டிரைவர்கள் மேட்டுப்பட்டியை சேர்ந்த ராஜசேகர்(32), அசோக்குமார்(39) ஆகியோரையும் கைது செய்து தனிப்படையினர் சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சொகுசு கார் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து காயத்ரி உள்பட 3 பேரையும், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post அரசு அதிகாரி என்று கூறி ரூ.20 கோடி மோசடி விசிக பெண் நிர்வாகி சென்னையில் சிக்கினார்: புரோக்கர்கள் 2 பேரும் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்