×

தியேட்டர் ஊழியர்களின் இஎஸ்ஐ தொகையை செலுத்தாத விவகாரம் நடிகை ஜெயப்பிரதாவின் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு: வசூலித்த தொகையை 15 நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு

சென்னை: திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து 20 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து அண்ணா சாலை அருகில் ஜெயப்பிரதா என்கிற தியேட்டரை நடத்தி வந்தார்.

அப்போது, அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்று எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது.

இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 15 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து இ.எஸ்.ஐ.க்கு செலுத்த வேண்டிய 20 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார். மேலும் 20 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

The post தியேட்டர் ஊழியர்களின் இஎஸ்ஐ தொகையை செலுத்தாத விவகாரம் நடிகை ஜெயப்பிரதாவின் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு: வசூலித்த தொகையை 15 நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jayaprada ,Chennai ,ESI ,Dinakaran ,
× RELATED வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல்