×

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று கூறுவது ஆணவம்; கூலிக்கு கூட்டத்தை சேர்க்கும் அண்ணாமலை: கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக எந்த காலத்திலும் பாஜவோடு ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக அறிவித்து விட்டார். அதற்கு பிறகு அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டு, இனி அதிமுகவுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டது. அதற்கு பிறகு பல் பிடுங்கிய பாம்பாக, பியூஸ் போன பல்பாக செயல்பட்டு வருகிறார். திமுக கூட்டணி வெற்றி பெற கடும் பணியாற்றியதன் காரணமாக செந்தில் பாலாஜியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து முடக்க வேண்டுமென்று அண்ணாமலையின் பரிந்துரையின் பேரில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீட்டிய சதித் திட்டத்தில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

அதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு சாதாரண வழக்கில் ஒரு குற்றவாளியை விசாரிக்க 4 மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகும், அவரை ஜாமினில் விடுவிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை கடுமையாக வாதாடியதால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், அரைவேக்காடு அண்ணாமலை தாம் ஒரு நீதிபதி போல காட்டிக் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது என்று ஆணவத்தின் உச்சில் அமர்ந்துக் கொண்டு பேசியிருக்கிறார். இன்றைக்கு மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது என்று ஒரு மாநில பாஜ தலைவர் அண்ணாமலை கூறுவது நீதிமன்ற நடைமுறையில் தலையிடுகிற மிகப்பெரிய குற்றமாகும். கூலிக்கு கூட்டத்தை சேர்த்து அதிரடி பேச்சுக்களின் மூலம் தாம் ஒரு தலைவராக முடியும் என்று பகல் கனவு காண்கிறார் அண்ணாமலை. இவருக்கு சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறதோ இல்லையோ, தமிழக மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி உரிய பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று கூறுவது ஆணவம்; கூலிக்கு கூட்டத்தை சேர்க்கும் அண்ணாமலை: கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Annamalai ,K. S. ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,Akhagiri ,Adimuga ,Bajawa ,Sendil Balaji ,K. S. Akhgiri ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...