×

நல்லம்பள்ளி அருகே வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பியதால் பரபரப்பு

*சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நல்லம்பள்ளி : நல்லம்பள்ளி அருகே, வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோலை நிரப்பியதால் வாகனங்கள் பாதி வழியிலேயே நின்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பாளையம்புதூர் ஊராட்சி நான்குரோடு பகுதியில் உள்ள சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன், அதிகாலை 5 மணியளவில், கோவையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் தனது டூவீலருக்கு பெட்ரோல் போட்டார்.

சுமார் 500 மீட்டர் தூரம் சென்றதும், டூவீலர் திடீரென நின்று விட்டது. இதனையடுத்து, சிறிது தூரம் தள்ளிச் சென்ற பிறகு, மீண்டும் டூவீலரை ஸ்டார்ட் செய்த போது இயங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், டூவீலரில் உள்ள பெட்ரோலை பரிசோதனை செய்த போது, அதில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தனது டூவீலரை தள்ளிக் கொண்டு மீண்டும் அந்த பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.

அப்போது, அங்கு பவானியை சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது டூவீலருக்கு தண்ணீர் கலந்த பெட்ரோலை நிரப்பியது தொடர்பாக, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். இதுபற்றி இளவரசனும் அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், ஊழியர்கள் மழை பெய்ததால், பெட்ரோலில் தண்ணீர் கலந்து விட்டது என அலட்சியமாக கூறியுள்ளனர். இதையடுத்து, இளவரசன் தனது டூவீலரை சரிசெய்தால் மட்டுமே, இங்கிருந்து செல்வேன் என கூறியதை தொடர்ந்து, ஊழியர்கள் தண்ணீர் கலந்த பெட்ரோலை அவரது வண்டியில் இருந்து எடுத்து, சுத்தம் செய்தனர்.

இதனிடையே, டூவீலரில் இருந்து தண்ணீர் கலந்த பெட்ரோலை ஊழியர்கள் எடுக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நேரத்தில், அந்த பங்கில் பெட்ரோல் போட்ட கார்கள் மற்றும் டூவீலர்களும் பாதி வழியில் நின்றுள்ளது. அவர்கள் வாகனங்களை மெக்கானிக் கடையில் விட்டபோது, அதிலும் தண்ணீர் கலந்த பெட்ரோலை வாகனங்களுக்கு நிரப்பியது தெரியவந்தது. இது போல், பெட்ரோலில் தண்ணீரை கலந்து அடிக்கும் பங்க்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post நல்லம்பள்ளி அருகே வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nallampally ,
× RELATED சிறுமியின் காதலை கண்டித்த தாயின்...