×

பாலியல் கொடூரம்

கோவை ஆர்.எஸ்.புரம் தனியார் பள்ளியில் 12வது வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, பள்ளி ஆசிரியரின் பாலியல் தொந்தரவு காரணமாக வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இம்மாணவியின் பெற்றோர் ரோட்டோரம் தள்ளுவண்டியில் வடை, பஜ்ஜி, போண்டா என பலகாரம் விற்று, பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  அதே பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் பிடியில் சிக்கிக்கொண்ட இந்த மாணவி, பிரச்னையை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். தனது மனதுக்குள்ளேயே பூட்டிவைத்து, மனஅழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ஆசிரியரின் பாலியல் தொல்லையில் இருந்து விடுபட நினைத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான், அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு இடம் மாறியுள்ளார். ஆனாலும், டெலிபோன் மூலமாக அந்த காமக்கொடூர ஆசிரியரிடம் இருந்து டார்ச்சர் வந்துள்ளது. அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துவிட்டாலும், அந்த ஆசிரியர் வாட்ஸ்அப், மெசேஜ் மூலமாக தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால், வாழ்வில் வெறுத்துப்போன மாணவி, தற்கொலை முடிவை நாடிவிட்டார். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறந்த குருவாக மட்டுமே இருக்கவேண்டும். மாறாக, ஒழுக்க சீர்கேட்டில் ஈடுபடக்கூடாது. இந்த இழிவுச்செயல், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப, மாணவர்களும் உஷாராக வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர் அல்லது ஒரு மாணவன் எல்லை மீறுகிறார் என்றால், மாணவிகள் உடனே உஷாராகிவிட வேண்டும். இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர் அல்லது பெற்றோர் என யாராவது ஒருவரது கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கூச்சம், தயக்கம் கூடவே கூடாது. பெற்றோருக்கு அவப்பெயர் ஏற்படுமே என்ற எண்ணமும் கூடாது. தயங்கினால், பாலியல் சீண்டலின் எல்லை அதிகரிக்கும். சிலநேரம், இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உருவாகிவிடும். தங்கள் பிள்ளைகள் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என பெற்றோர் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அன்றாடம் பள்ளி முடிந்து வந்தவுடன், அவர்களிடம் மனம்விட்டு பேசவேண்டும். அவர்களது நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும். முடிந்தவரை, அவர்களது மனநிலையை உள்வாங்க வேண்டும். இதை முறையாக செய்யும் பட்சத்தில், பெற்றோர் வளையத்துக்குள் பிள்ளைகள் இருக்கும். பிரச்னை எதுவாக இருந்தாலும், தீர்வு நம் கையில்தான் உள்ளது. ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் என இந்த மூன்று உறவு முறைகளும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தவை. இந்த உறவுகளுக்குள் வெளிப்படைத்தன்மை இருந்தால், பிரச்னைகளுக்கு இடமில்லை. உயிரிழப்பு ஏற்படவும் அவசியம் இல்லை. …

The post பாலியல் கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Govine ,Puram Private School ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...