×

ஏடிஎம்மில் உதவுவது போல் நடித்து ₹22 ஆயிரம் திருட்டு டெல்லி வாலிபர் ஆரணியில் கைது வேலூர் லாட்ஜில் தங்கியிருந்து கைவரிசை

ஆரணி, அக்.19: வேலூர் லாட்ஜில் தங்கயிருந்து ஆரணியில் ஏடிஎம்மில் உதவுவது போல் நடித்து ₹22 ஆயிரம் திருடிய டெல்லியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணிப்பாளைம் வடிகராஜா தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜி(72), ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர், கடந்த மாதம் 27ம் தேதி ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் பணம் எடுத்து கொடுக்கும்படி கூறி ஏடிஎம் கார்டை கொடுத்தார். அப்போது, அந்த நபர் ₹22 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பணம் வரவில்லை என கார்டை அவரிடம் திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் பார்த்தபோது, பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, ஆரணி டவுன் போலீசில் கோவிந்தராஜி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, ஏடிஎம் கார்டில் நூதனமுறையில் பணம் திருடிச்சென்ற மர்மநபரை வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், ஆரணி டவுன் போலீசார் தச்சூர் சாலையில் உள்ள வங்கி அருகில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வங்கிக்கு வரும் நபர்களை கண்காணித்து வந்தனர். அப்போது, அங்கு, சந்தேகப்படும்படி இருந்த ஒருவரை போலீசார் மடக்கி விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார்.

இதனால், சந்தேமடைந்த போலீசார் அந்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் டெல்லியில் உள்ள பிரேம் நகர் பகுதியை சேர்ந்த சஞ்ய்குமார்(32) என்பதும், ஓய்வு பெற்ற டிரைவரின் ஏடிஎம் கார்டில் பணம் திருடியச்சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இவர் வேலூரில் உள்ள தனியார் லாட்ஜில் ரூம் வாடகை எடுத்து தங்கி வந்து, இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. உடனே, போலீசார் சஞ்சய்குமாரை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post ஏடிஎம்மில் உதவுவது போல் நடித்து ₹22 ஆயிரம் திருட்டு டெல்லி வாலிபர் ஆரணியில் கைது வேலூர் லாட்ஜில் தங்கியிருந்து கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Arani ,ATM ,Vellore Lodge ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு