×

அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் 16,496 பேருக்கு பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அரசு நிலங்களில் பல ஆண்டுகளாக வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் 16,496 பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதில், கிராம கணக்குகளில் உரிய மாறுதல் மேற்கொள்ளப்படாமல் இருந்த பட்டாக்கள் சரி செய்ய வேண்டும் என்று இரண்டு வாரத்துக்கு முன் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அவர் அறிவுறுத்தியதற்கிணங்க நீர்வழி புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல், மந்தைவெளி, மயானம் மற்றும் பாட்டை என வகைப்பாடு செய்யப்பட்ட அரசு நிலங்கள் அத்தகைய உபயோகத்தில் இல்லாமல் நத்தமாக உபயோகத்தில் இருந்து அதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு அந்நிலங்கள் அரசின் உபயோகத்திற்கு தேவை இல்லை எனில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ஆகியோரை கொண்ட குழு அந்த நிலங்களை தணிக்கை செய்து உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானங்களை பெற்று தகுதியின் அடிப்படையில் குடியிருப்புகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது.

மேலும், சென்னை புறநகர் பகுதி, நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் வீட்டுமனை ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட தடையாணையும் ஒருமுறை மட்டுமே வரன்முறை செய்து வீட்டுமனை ஒப்படை வழங்கும் திட்டத்திற்கு முன்னர் தளர்வு செய்யப்பட்டது. இந்த அரசாணைகளின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் ஆட்சேபனை உள்ள மற்றும் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வீடுகள் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பவருக்கு வீட்டுமனை ஒப்படை வழங்க ஏதுவாக மாவட்ட ஆட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், 2000 – 2011 காலகட்டங்களில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் கிராம கணக்குகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நத்தம் அடங்கலில் ஏற்றப்படாததால், தங்களால் அதிகாரப்பூர்வமான பரிவர்த்தனை, வங்கி கடன் பெற இயலவில்லை என்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்களிடம் இருந்தும் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும் அரசுக்குதொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இந்த கோரிக்கைகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, வீட்டுமனை பட்டாக்களின் கிராம கணக்குகளில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, பட்டா வழங்கப்பட்ட விவரங்களை கிராம நத்தம் அடங்கல் மற்றும் வட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கணினி மயமாக்கப்பட்ட நத்தம் தரவுகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாநாட்டில் அறிவுறுத்தினார்.

அதன்படி, முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 8136 பட்டாக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3949 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4411 பட்டாக்கள் என மொத்தம் 16,496 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட ஆய்வு கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை வழங்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3256 பட்டாக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 197 பட்டாக்கள் என மொத்தம் 3462 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளும் விரைவில் நிறைவு பெறும். இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் 16,496 பேருக்கு பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Patta ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...