×

அதிமுக ஆட்சியின்போது மருந்துகள் இறக்குமதி செய்ததில் பல கோடி வரிஏய்ப்பு 5 மருந்து தயாரிப்பு, இறக்குமதி நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: பல கோடி மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

சென்னை: வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்த 5 மருந்து தயாரிப்பு மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து, வரி ஏய்ப்பு நடந்துள்ளதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியின்போது கொரோனா காலக்கட்டத்தில் அவசர தேவைக்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவ்வாறு இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து மருந்து மொத்த கொள்முதல் செய்த நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை வேப்பேரியில் உள்ள கே.வி.எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுனில் உள்ள மருந்து மொத்த கொள்முதல் செய்யும் கவர்லால் குழுமம் மற்றும் அதன் தொழிற்சாலைகள், மாதவரம் பகுதியில் உள்ள வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்யும் ஆதிஷ்வர் எக்சிபையண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுன் பகுதியில் உள்ள கே.பி.மனிஷ் குளோபல் இன்கிரிடியன்ஸ் நிறுவனம், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கவ்மன் எக்ஸாக்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் என ஐந்துக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு மற்றும் மருந்துகளை மொத்த கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் செலுத்திய வருமான வரித்துறை கணக்கில் பல கோடி ரூபாய் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஒன்றிய அரசுக்கு பல நூறு கோடி அளவுக்கு வருவாயை குறைத்து கணக்கு காட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்குள்ளாகிய 5 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தும் வகையில், நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட வாடகை கார்களை வரவழைத்தனர். பிறகு 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் கார்களில் சோதனை நடத்த வேண்டிய இடங்களுக்கு பிரிந்து சென்றனர். குறிப்பாக, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ஸ்கோப் இன்கிரிடியன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி அண்ணாசாலையில் உள்ள சயல் மேன்ஷன் வளாகத்தின் 5வது மாடியில் இயங்கி வரும் கவ்மன் எக்ஸாக்ட் மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மருந்து கிடங்குகளிலும் சோதனை நடத்தினர். சென்னை சவுகார்பேட்டையில் அலங்கார் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள மருந்து நிறுவனம், ேவப்பேரியில் உள்ள கே.வி.என்டர்பிரைசஸ் நிறுவனம், மாதவரத்தில் உள்ள நடராஜன் தெருவில் உள்ள சென்னை மாதவரம் நடராஜன் தெருவில் உள்ள மணிஷ் குளோபல் இண்டஸ்ட்ரிஸ் என்ற மருத்துவ மூலப்பொருள் சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து மருந்து தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்து தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள ஆதிஷ்வர் எக்ஸிபியண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திலும் சோதனை நடந்தது. ஆதிஷ்வர் எக்ஸிபியனட்ஸ் நிறுவனம், பார்க் டவுன் பகுதியில் உள்ள மருந்து மொத்த கொள்முதல் நிறுவனம் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று இரவு வரை சோதனை நீடித்தது. கவ்மன் எக்ஸாக்ட் மருந்து நிறுவனத்துக்கு சொந்தமான கல்லூரி, சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை, சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கடந்த 2021ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த ஆவணங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆவணங்களை வைத்து தற்போது தாக்கல் செய்த ஆவணங்களுடன் ஒப்பிட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொரோனா காலத்தில் மருந்துகள் கொள்முதல் செய்ததில் இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததும், உற்பத்தியை குறைத்து கணக்கு காட்டியதற்கான ஆவணங்கள் சிக்கியது. சீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து மருந்து மூலப்பொருட்கள், மருந்து தயாரிக்க ரசாயனம் கொள்முதலில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மருந்து தயாரிப்பு மற்றும் மருந்து கொள்முதல் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வரும் சம்பவம் மருந்து உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுக ஆட்சியின்போது மருந்துகள் இறக்குமதி செய்ததில் பல கோடி வரிஏய்ப்பு 5 மருந்து தயாரிப்பு, இறக்குமதி நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: பல கோடி மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Income tax department ,CHENNAI ,AIADMK ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...