×

தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

சென்னை: தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டினை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் போதிய நிதிவசதி இல்லாத விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு தேவையான நல உதவிகள் வழங்கிடும் வகையில் “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” (Tamil Nadu Champions Foundation) உருவாக்கப்பட்டு 08.05.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.

விளையாட்டுத் துறை சிறப்பாக இயங்கிட நிதி ஆதாரம் என்பது மிக அவசியமான ஒன்றாகும். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” (Tamil Nadu Champions Foundation) தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அறக்கட்டளையானது வருமானவரிச் சட்டம் 1961 ன் பிரிவு 12 AA மற்றும் 80G யின் கீழ் வரிவிலக்கு சான்று பெற்றுள்ளது. இந்த அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கியுள்ளார்கள். பல்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவித் தொகையாக ரூ.3,96,48,649/- (ருபாய் மூன்று கோடியே தொண்ணூற்று ஆறு இலட்சத்து நாற்பத்து எட்டு ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து ஒன்பது மட்டும்) வழங்கப்பட்டுள்ளது.

தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சார்ந்த போதிய நிதிவசதி இல்லாத வீரர் / வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற்றிட என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

The post தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Champions Foundation ,Chennai ,Weeranganaga ,Weerangans ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...