சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு ஆலை மற்றும் கடையில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வறுமை காரணமாக உயிரை பணயம் வைத்து ஆண்களும், பெண்களும் பட்டாசு ஆலைகளில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அறிந்தே, குடும்ப சூழ்நிலை காரணமாக இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உயிரிழந்த 14 பேர்களில் 13 பேர் பெண்கள், பெற்ற தாயை இழந்து தவித்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. குடும்பங்களை நிர்க்கதியாக விட்டு பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்த 14 பேர்களின் ஆத்மா சாந்தியடையவும், தாயை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் தடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் வறுமையை போக்கும் விதமாக புதிய வேலை வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post பட்டாசு ஆலை வெடி விபத்தில் 14 பேர் பலி: என்.ஆர்.தனபாலன் இரங்கல் appeared first on Dinakaran.