×

ஐஐடி, என்ஐடிகளை உருவாக்கியது பாஜவா? பொய் சொல்வதில் மோடியை மிஞ்சிய அமித்ஷா: காங்கிரஸ் கிண்டல்

புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கானில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘நாட்டிலேயே ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எய்ம்ஸ் போன்றவை முதல் முறையாக உருவாக்கப்பட்டது பாஜவின் ஆட்சியில்தான்’’ என்றார். இது சமூக ஊடகங்களில் கடும் கேலிக்கூத்தாகி உள்ளது. காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘‘பொய் சொல்வதில் பிரதமர் மோடியை விட இரண்டு அடி முன்னேறிவிட்டார் அமித்ஷா. ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவை ஜவகர்லால் நேரு ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. ஆனால், பாஜவினர் பொய் சொல்லியே பழக்கப்பட்டவர்கள்’’ என பதிவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனடே, ‘‘அமித்ஷா நீங்கள் 1964ல் பிறந்தீர்கள். நீங்கள் பிறக்கும் முன்பே நாட்டின் முதல் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவை நேருவின் தொலைநோக்கு பார்வையால் தொடங்கப்பட்டு விட்டது. நேரு தேசத்தை கட்டி எழுப்பினார். வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தின் மூலம் பொய்களைப் பரப்புவதைத் தவிர நீங்கள் நாட்டுக்காக எதையும் செய்ததில்லை’’ என விமர்சித்துள்ளார். இதுதவிர சமூக ஊடகங்களில் பலரும், நாட்டின் முதல் ஐஐடி 1951ம் ஆண்டு கராக்பூரிலும், முதல் எய்ம்ஸ் 1956ல் டெல்லியிலும், முதல் என்ஐடி 1961ல் வாராங்கலிலும், முதல் ஐஐஎம் 1961ல் கொல்கத்தாவிலும், முதல் ஐஐஐடி 1997ல் குவாலியரிலும் தொடங்கப்பட்டதாகவும், இவை அனைத்துமே காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததாகவும் பதிவிட்டுள்ளனர்.

The post ஐஐடி, என்ஐடிகளை உருவாக்கியது பாஜவா? பொய் சொல்வதில் மோடியை மிஞ்சிய அமித்ஷா: காங்கிரஸ் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Baja ,Amit Shah ,Modi ,Congress ,New Delhi ,Chhattisgarh ,Rajnandgaon ,Union Home Minister ,AIIMS ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!