×

மரம் வெட்டிய தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி முதியவர் படுகொலை: விவசாயி கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த கனகம்மா சத்திரம் அருகே உள்ள ராமாபுரம் கிராமம், ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள புளிய மரத்தை அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த பிள்ளை மகன் செல்வம் (40) வெட்டியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இதை தட்டி கேட்பதற்காக ரவிக்கு ஆதரவாக உறவினர் பெருமாள் (60) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த செல்வம், தான் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையால் பெருமாளின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பெருமாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர். பின்னர், திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் நேற்று அதிகாலை பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பெருமாளை தாக்கிய வழக்கில் ஏற்கனவே கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 14ம் தேதி கைது செய்யப்பட்ட செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.

The post மரம் வெட்டிய தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி முதியவர் படுகொலை: விவசாயி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Ramapuram village ,Rangapuram ,Kanakamma Chatram ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...