×

மனிதாபிமானம், கம்பீரத்தால் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயல் காவல் துறையினருக்கு பெருமை சேர்த்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான செயல்பாடு தமிழ்நாடு காவல் துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அரசு நிர்வாகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல, பருவமழைக் காலத்துப் பேரிடர் நேரத்தில், மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பெருமழையில் சிக்கித் தவித்து, முறிந்து விழுந்த மரத்தின் கீழே சுயநினைவின்றிக் கிடந்த உதயா என்பவரின் உயிர் காக்கும் முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டு, கோல்டன் ஹவர் எனப்படும் அந்தப் பொன்னான நேரத்தைச் சரியாக உணர்ந்து, அவரைத் தோளில் சுமந்து, ஓடிச் சென்று, ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரை உயிர் பிழைக்க வைத்த தங்களின் அர்ப்பணிப்பு மிக்க கடமையுணர்வும், சீருடைப் பணியாளர்களுக்குரிய ஈர இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்குரியவை. 1992 கும்பகோணம் மகாமகத்தின்போது ஏற்படுத்தப்பட்ட நெரிசலில் உயிருக்குப் போராடியவர்களை மீட்பதில் தாங்கள் ஆற்றிய பணி எந்நாளும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். காவல் பணியில் எளிய மக்களின் துயர் துடைக்கும் கரங்களாக தங்களுடைய செயல்பாடு பல முறை அமைந்துள்ளது. கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையிலிருந்த பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் அவர்களைச் சேர்ப்பது, குற்றவாளிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எனத் தங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவும் காவல்துறை உயரதிகாரிகளின் பாராட்டுகளுக்கும் பொதுமக்களின் வாழ்த்துகளுக்கும் உரியவையாக அமைந்துள்ளன. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ற முறையிலும், மழைக்காலப் பேரிடர் நேரத்தில் தொடர்ச்சியாகப் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தவன் என்ற முறையிலும் தங்களின் மனிதாபிமானமிக்க உயிர்க் காப்புப் பணிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பதற்கேற்ப கம்பீரமாகவும் கருணை உள்ளத்துடனும் தாங்கள் மேற்கொண்ட பணி, காவல்துறையில் உள்ள அனைவருக்கும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்கக் கூடியதாகும். இவ்வாறு கூறியுள்ளார்….

The post மனிதாபிமானம், கம்பீரத்தால் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயல் காவல் துறையினருக்கு பெருமை சேர்த்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Inspector ,Rajeswari ,Humanity ,Magnificence ,Department of the Guard ,CM BC G.K. ,Stalin ,Chennai ,Tamil Nadu Police Department ,Chief Minister ,Mukhari ,G.K. Stalin ,CM BC ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு