×

2வது அரையாண்டு சொத்து வரி வரும் 31க்குள் ₹500 கோடி வசூலிக்க இலக்கு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை, அக்.17: சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இந்த வருவாய் மூலம், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து அரையாண்டுக்கு ₹850 கோடி வீதம், ஆண்டுக்கு ₹1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998ன் படி, சென்னை மாநகராட்சிக்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30 வரையிலும், 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.

அவ்வாறு சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ₹769 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ₹5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அரையாண்டில் மொத்தம் ₹850 கோடி சொத்து வரிவசூலிக்க வேண்டியுள்ள நிலையில், சலுகை அறிவித்து, வரும் 31ம் தேதிக்குள் ₹500 கோடி சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30 வரையிலும், 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும். முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்.30ம் தேதிக்கு முன்பாகவும், 2ம் அரையாண்டு சொத்துவரியை அக்.30ம் தேதிக்கு முன்பாகவும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீத ஊக்கத் தொகையாக அதிகபட்சம் ₹5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் சொத்துஉரிமையாளர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் நினைவூட்டல் மற்றும் பணம் செலுத்துவதற்கான இணையதள இணைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. வரி வசூலிப்பாளர்களிடம் உள்ள பிஓஎஸ் கையடக்க கருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக சொத்துவரி செலுத்தலாம். மண்டலம் அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாக பணமாக செலுத்தலாம். ‘நம்ம சென்னை’, பேடிஎம் செயலிகள், மாநகராட்சி இணையதளம் (www.chennaicorporation.gov.in), சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூஆர் கோடு மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம்.வரும் 31ம் தேதிக்குள் ₹500 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதற்கு முன்பு வரை, சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த தவறினால், அபராதமாக மாதத்துக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும். தவிர, இதற்குமுன்பு, எந்த சொத்துக்கு வரி கட்டவில்லையோ, அந்த சொத்தை மட்டும்தான் ஜப்தி செய்ய முடியும். புதிய சட்ட விதிகளின்படி, இனி, சொத்து உரிமையாளரின் எந்த சொத்தை வேண்டுமானாலும் ஜப்தி செய்ய முடியும். நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின் சொத்துகள் விரைவில் ஜப்தி செய்யப்பட உள்ளன,’’ என்றனர்.

ஆன்லைனில் செலுத்தலாம்
சொத்துவரி செலுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம், முக்கிய இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு உள்ளிட்டவை செய்யப்படுகிறது. மேலும், சொத்து உரிமையாளர்கள் எளிதாக சொத்து வரியை செலுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சொத்து வரியை, வரி வசூலிப்பாளரிடம் காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது கடன்/பற்று அட்டை மூலமாகவோ செலுத்தலாம். மேலும், மாநகராட்சி வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், மாநகராட்சி இணையதளம் மூலமாகவும், நம்ம சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜப்தி நடவடிக்கை
சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி, அதிக சொத்து வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்து வருகிறது. அதையும் மீறி வரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, ₹10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது. இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சமீப காலமாக அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி, நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையின் காரணமாக சொத்து வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் சில தங்களது சொத்து வரி நிலுவையினை செலுத்தியுள்ளன.

The post 2வது அரையாண்டு சொத்து வரி வரும் 31க்குள் ₹500 கோடி வசூலிக்க இலக்கு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Target ,Chennai ,Chennai Corporation ,31 ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...