×

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை; மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!

சென்னை: திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். சென்னை சைதாபேட்டை பெட்ரோல் பங்க் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொதுநிவாரண திட்டத்தின் கீழ் நான்கு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன்; கடந்த 2 ஆண்டுகால மழை பொழிவால் சென்னையில் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைக்காலத்தில் முதல்வரே அனைத்து இடத்திற்கும் சென்று ஆய்வு செய்ததுடன், திருப்புகழ் குழுவின் அறிக்கை அடிப்படையில் சென்னையில் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 878.98 கி. மீ நீளத்திற்கு சென்னையில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்காக 2,898 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சென்னையில் 100 சதவீதம் பாதிப்பு ஏற்படாத வகையில் புறநகர் பகுதியிலும் பல்வேறு துறைகளின் மூலம் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 2073 கி.மீ ஆக இருந்த மழைநீர் வடிகால்வாய் நீளம், தற்போது 2,952 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. பருவமழைக்கு முந்தைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பருவமழைக்கு முன்பு டெங்கு பாதிப்பு ஏற்படுவது எல்லா நாடுகளிலும் இருப்பதுதான். டெங்கு பரவலும் கடந்த ஆண்டுகளை விட குறைவாகவே உள்ளது, போதிய மருந்துகளும் கையிருப்பு உள்ளன. தொடர்ந்து பேசிய அமைச்சர், திருசெங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதா பணியிடை நீக்க செய்யவும், தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

குறிப்பிட்ட மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோர் சிறுநீரகம் உட்பட உடல் உறுப்புகள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வேறு எங்கும் இதுபோல குழந்தைகள் விற்பனை நடைபெறுகிறதா என விசாரணை நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றோர் விற்பது மோசமான முன்னுதாரணம், பெற்றோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை; மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Trichenkot ,Minister ,Narendra Modi ,Anuradha ,Supermanyan ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...