×

காரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு: போலீசில் வியாபாரி புகார்

 

சிவகாசி, அக்.16: கோவை ராமகிருஷ்ணாபுரம் ரோட்டை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(61). இவர் கோவையில் வெள்ளி பொருட்கள் தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். தென் மாவட்டங்களில் கடந்த 20 வருடங்களாக நகைக்கடைகளுக்கு வெள்ளி பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகாசி வடக்கு ரத வீதியில் உள்ள ஒரு கடைக்கு வெள்ளி பொருட்களை சப்ளை செய்வதற்காக தனது காரில் வந்துள்ளார்.

காரின் பின் சீட்டில் வெள்ளி பொருட்களை வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் காரில் வந்து பார்த்த போது ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களும் ரூ.25 ஆயிரம் பணமும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். தனது கார் டிரைவர் சாமுவேல் கணேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

The post காரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு: போலீசில் வியாபாரி புகார் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Muthukrishnan ,Ramakrishnapuram Road, Coimbatore ,Coimbatore ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை