×

நாம் எல்லோருக்கும் உள்ளத்தில் நிறைந்திருக்கும் தமிழ் மொழியை யாரும் அழித்துவிட முடியாது: தமிழியக்கம் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: ‘‘நாம் எல்லோரும் தமிழர்கள்; நம் மொழி தமிழ் மொழி என்று தமிழ்மொழி உள்ளத்தில் இருக்கும் பொழுது அதனை யாரும் அழித்துவிட முடியாது’’ என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் 6ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழியக்கம் நிறுவன தலைவர் விசுவநாதன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியதும் மகளிர் உரிமை தொகை அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் விழாவில் பேசியதாவது:

எனக்கு ஆசானாக என்னை உருவாக்கிய சிற்பி விஸ்வநாதன். அவர் பெற்ற வளர்ச்சி, அவர் கல்வி துறையில் பெற்ற வெற்றிக்கு நிம்மதியாக வாழலாம். ஆனால் தமிழியக்கம் என்று ஒரு மன்றத்தை உருவாக்கி அதை கொண்டு செல்வது எவ்வளவு கடினம் என்பது இப்போது தெரிகிறது. இது அவர் தமிழ் மீது கொண்ட பற்றை காட்டுகிறது. நாம் எல்லோரும் தமிழர்கள் நம் மொழி தமிழ் மொழி என்று தமிழ்மொழி உள்ளத்தில் இருக்கும் பொழுது யாரும் அதனை அழித்துவிட முடியாது. செத்துப்போன மொழிகள் எல்லாம் செம்மொழியாக இருக்கும் போது வாழும் மொழியான என் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்டவர் மனோன்மணியம், அதன் பின்னர் பேசியவர் கலைஞர் கருணாநிதி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கி கொடுத்தவர் கலைஞர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

The post நாம் எல்லோருக்கும் உள்ளத்தில் நிறைந்திருக்கும் தமிழ் மொழியை யாரும் அழித்துவிட முடியாது: தமிழியக்கம் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister Durai Murugan ,Tamiliyakkam ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...