×

அர்ஜென்டினா மகளிர் சாதனை

* சிலி மகளிர் அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் 427ரன் குவித்த அர்ஜென்டீனா மகளிர் அணி 364ரன் வித்தியாசத்தில் வென்று உலக சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 330ரன் குவித்த அர்ஜென்டீனா 281ரன் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. சிலி எடுத்த 19ரன்னில் உதிரிகளின் எண்ணிக்கை மட்டும் 15. இது தவிர ஜெசிகா 3, சோபியா 1 ரன் எடுத்தனர். மீதி எல்லோரும் டக் அவுட்.

* தமிழ்நாட்டில் முதல்முறையாக சர்வதேச அளவில் இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் மட்டும் பங்கேற்கும் சதுரங்கப் போட்டி இன்று தொடங்குகிறது. சென்னை டிஎன்எஸ்சிஏ அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் அமெரிக்கா, கிரிகிஸ்தான், ரஷ்யா, அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

* ‘பள்ளி கூட பசங்களிடம், பெரிய பசங்க விளையாடிய ஆட்டம் போல் பாக்-இந்தியா ஆட்டம் இருந்தது’ என்று சேவாக் விமர்சித்துள்ளார்.

* அகமதாபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களை பார்த்து இந்திய ரசிகர்கள் கேலி கிண்டல் செய்ததும், ஜெய் ராம் முழக்கமிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனை உணர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ‘அகமதாபாத்தில் விளையாட தங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று ஐசிசிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதனை ஐசிசி ஏற்கவில்லை. அதனை இப்போது பாக் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சுட்டிக் காட்டி நேரடியாகவே குற்றம் சாட்டி உள்ளார்.

* உக்ரைன் மீது ரஷ்யா போர் செய்வதால் அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. டென்னிஸ் போட்டியில் மட்டும் நாட்டின் பெயர் குறிப்பிடாமல் போட்டியில் பங்கேற்க ஆட்டக்காரர்களை அனுமதிக்கின்றனர். இந்நிலையில் மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்(ஐஓசி) செயற்குழு கூட்டத்தில், ‘ரஷ்யாவின் ஒலிம்பிக் அமைப்பை இடைநீக்கம் செய்வது மட்டும்தான் ஐஓசிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்பது சந்தேகம். அப்படியே பங்கேற்க அனுமதிக்கப்பட்டாலும் ரஷ்யா வீரர்கள், வீராங்கனைகள் ரஷ்ய கொடிக்கு பதிலாக ஒலிம்பிக் கொடியை பயன்படுத்த வேண்டும். கூடவே நாடு சாரா நடுநிலை ஆட்டக்காரர்களாக அவர்கள் கருதப்படுவார்கள்.

* கோஹ்லி தனது கையொப்பமிட்ட சீருடையை பாக் கேப்டன் பாபர் அஸமுக்கு பரிசாக வழங்கினார். பாக் தோல்வி அடைந்த நிலையில் கோஹ்லியின் சீருடையை பரிசாக பெற்றதை பாக் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

* சீனாவில் நடந்த ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டி பைனலில் ஹூபர்ட் ஹர்காஸ்(போலாந்து) 6-3, 3-6, 7-6(10-8) என்ற புள்ளிக் கணக்கில் ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

The post அர்ஜென்டினா மகளிர் சாதனை appeared first on Dinakaran.

Tags : Argentina ,women's ,Dinakaran ,
× RELATED அர்ஜெண்டினாவில்...