×

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சிபிஐ முதலில் தட்டப்போகிற கதவு மோடி, அதானி கதவுகளை தான்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

திருவொற்றியூர்: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சிபிஐ முதன்முதலில் தட்டப் போகிற கதவு மோடி, அதானி கதவுகளாகத்தான் இருக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மத்திய பகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மணலி பார்த்தசாரதி தெருவில் நேற்று முன்தினம் நடந்தது. பகுதி செயலாளரும், மண்டல குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு 10 பேருக்கு தையல் இயந்திரம், 1000 பேருக்கு புடவை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: தேர்தலில் 100க்கு 100 இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வருகிறது. அதனால் மோடி அரண்டு போய் 5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னோட்டமாக பார்க்கப் போகிறார். இந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றால் டிசம்பரில் தேர்தல் வரும். தோற்றால் மே மாதம் தான் தேர்தல் வரும். மே மாதத்துக்குள் என்னென்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்ய முடிவு எடுத்து விட்டார்கள்.

நேற்று முன்தினம் சிஏஜி அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார்கள். 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி மோடி ஊழல் செய்தார் என்று கண்டுபிடித்த அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தனக்கு வேண்டியவர்களை சிபிஐ மற்றும் நீதித்துறையில் அமர வைத்துவிட்டு எதிர்க்கட்சியானால் சிறைக்கு போகாமல் தப்பிக்கலாம் என்று மோதி கருதுகிறார். யார், யார் வீட்டில் தேவையில்லாத சிபிஐ ரெய்டு பண்ணாரோ மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதன்முதலில் தட்டப்போற கதவு மோடியின் கதவும், அதானியின் கதவாகத்தான் இருக்கும். இந்தியா பெயரை மாற்றி விட்டார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பெயரை மாற்றுவார்கள். ஒரே மதம் ஒரே மொழி, ஒரே சாப்பாடு, சப்பாத்தி தான் சாப்பிட வேண்டும் என்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மேற்கு பகுதி திமுக செயலாளர் வை.ம.அருள்தாசன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், நாகலிங்கம், விசா மதிவாணன், முத்துசாமி, கரிகால சோழன், மதன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சிபிஐ முதலில் தட்டப்போகிற கதவு மோடி, அதானி கதவுகளை தான்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Adani ,CBI ,Tiruvottiyur ,RS ,Bharati ,Dinakaran ,
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்