×

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்த டெம்போவுக்கு ₹25 ஆயிரம் அபராதம்

*குலசேகரம் பேரூராட்சி அதிரடி

குலசேகரம் : கேரள மாநிலத்தில் இருந்து பிராயிலர் கடை கழிவுகள், இறச்சி கழிவுகள், உணவு கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவை கூண்டு கட்டிய வாகனங்கள் மூலம் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இரவு நேரங்களில் இவைகளை நீர்நிலைகள், கால்வாய் கரையோர பகுதிகள், மக்கள் நெருக்கம் குறைந்த பகுதிகள், சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர்.

கேரளாவில் கழிவுகள் கையாளுவதில் கடும் விதிமுறைகள் உள்ளதால், கழிவுகள் கொட்டுவதற்கு எல்லையோரம் உள்ளம் குமரி உள்பட தமிழ்நாட்டின் இதர பகுதிகளை பயன்படுத்துகின்றனர். இதற்காக தனி வாகன சேவைகள் உள்ளது. எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளை சரிகட்டி குமரி மாவட்டத்திற்குள் இந்த கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் தடையின்றி வந்து செல்கின்றன.

இந்த கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளில் துர்நாற்றம், சுகாதாரகேடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆகவே இவ்வாறு கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பபடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. போலீசாரும் அவ்வப்போது வாகன சோதனையில் சிக்கும் இத்தகைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதே போன்று நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் குலசேகரம் வழியாக கேரள பதிவு எண் கொண்ட கூண்டு கட்டிய டெம்போ வேகமாக வந்துகொண்டிருந்தது. வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனே தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் முழுவதும் இறைச்சி கழிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்து கழிவை ஏற்றி வந்தது தெரியவந்தது.

உடனே வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், குலசேகரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் குலசேகரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் இதற்கு ₹25 ஆயிரம் அபரதம் விதித்தது. அபரத தொகையை செலுத்திய பிறகு வாகனத்தை போலீசார் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.

The post கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்த டெம்போவுக்கு ₹25 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Tempo ,Kerala ,Kulasekaram Municipal Corporation ,Kulasekaram ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...