×

அரைகுறை ஈரப்பதத்தில் விதைகள் முளைத்து கெட்டு போனதால் 2வது முறையாக விதை ஊன்றும் கோவில்பட்டி வட்டார விவசாயிகள்

கோவில்பட்டி : அரைகுறை ஈரப்பதத்தில் விதைகள் முளைத்து கெட்டு போனதால் கோவில்பட்டி வட்டார விவசாயிகள், 2வது முறையாக விதைகள் ஊன்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் சுமார் 1.70 லட்சம் எக்டேர் மானாவாரி விவசாய நிலங்களில் கடந்த ஆவணி மாத இறுதி முதல் மக்காச்சோளம், பருத்தி, வெள்ளைச் சோளம், சிவப்புசோளம் போன்றவை விதைப்பு செய்தனர். கடந்த 23 நாட்களில் முழுமையாக எந்த பகுதியிலும் மழை பெய்யாமல் சுழி சுழியாக சாரல் மழை பெய்தது. மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்காச்சோளம் ஏக்கருக்கு 8 கிலோ வீதம் விதை ஊன்றினர். உளுந்து, பாசி ஏக்கருக்கு 6 கிலோ வீதமும், பருத்தி 500 கிராம் வீதமும், வெள்ளைச் சோளம் ஏக்கருக்கு 3 கிலோ வீதமும் விதைப்பு செய்தனர்.

போதிய சராசரி மழை பெய்யாமல் அரைகுறையாக பெய்து தொடர்ச்சியாக மழை இல்லாததால் விதைகள் சுமாரான ஈரப்பதத்தில் முளைத்து தற்போது நிலவிவரும் கடும் வெயில் மற்றும் காற்றுக்கு விதைகள் முளைப்பிலேயே வெம்பிவிட்டது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் புரட்டாசி 25ம் தேதி பிறந்தும் இன்னும் மழை பெய்யவில்லை. ஏற்கனவே ஒரு முறை உழவு செய்ய, உரமிட, விதை ஆகியவற்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு ஏற்பட்ட நிலையில் 2வது முறையாக மீண்டும் மக்காச்சோளம் விதையை மழை பெய்யும் என நம்பி ஊன்றுகின்றனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை அறிகுறியின்றி புரட்டாசி மாதம் வெயில் சுட்டெரிக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஐப்பசி பிறந்தவுடன் கொத்தமல்லி விதைப்பு செய்ய வேண்டும். அதனுடன் சூரியகாந்தி விதைப்பு செய்ய வேண்டியுள்ளது. எனவே துவண்டு போயுள்ள விவசாயிகளுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post அரைகுறை ஈரப்பதத்தில் விதைகள் முளைத்து கெட்டு போனதால் 2வது முறையாக விதை ஊன்றும் கோவில்பட்டி வட்டார விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti district ,Kovilpatti ,Koilpatti ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் காவலர்கள்...