×

நீதிமன்றம் சென்று விட்டு திரும்பியபோது நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

சென்னை, அக்.13: திருமுல்லைவாயல் அருகே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமுல்லைவாயல் அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரண் (23). இவர் மீது திருமுல்லைவாயல், திருவேற்காடு, ஜெ.ஜெ.நகர், மதுரவாயல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் கஞ்சா வழக்கு தொடர்பாக, இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், திருவேற்காடு பிரதான சாலை அருகே சரணை வழிமறித்து வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால், ஓட ஓட விரட்டி அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சரண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

தகவலறிந்த ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்த் சம்பவ இடத்திற்கு வந்து, சரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து இணை கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், ‘‘ஜெ.ஜெ. நகரில் நடந்த கொலை வழக்கில் சரண் சம்பந்தப்பட்டு இருப்பதால், அந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம், என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது,’’ என்றார். இணை ஆணையர் விஜயகுமார் உத்தரவின் பேரில் ஆவடி துணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரவுடி ஒருவர், ஓட ஓட விரட்டி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நீதிமன்றம் சென்று விட்டு திரும்பியபோது நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirumullaivayal ,
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...