×

‘‘வாடிக்கையாளர் புக்கிங் ெசய்த ஒருநாளில் கிடைக்கணும்’’ ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர்களை சப்ளை செய்ய ஏஜென்சிகளுக்கு உத்தரவு: இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை

சேலம்: ஞாயிற்றுக்கிழமையும் சிலிண்டர்களை சப்ளை செய்ய வேண்டும் என இண்டேன் ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.நாடு முழுவதும் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விநியோகத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதில், மிக அதிகபடியான வாடிக்கையாளர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், இண்டேன் என்னும் காஸ் சிலிண்டரை சப்ளை செய்து வருகிறது.

வாடிக்கையாளர்களான மக்கள், சிலிண்டர் புக்கிங் செய்த 2, 3 நாட்களுக்குள் இண்டேன் சிலிண்டரை அதன் ஏஜென்சிகள் சப்ளை செய்கிறது. கிராமப்புற பகுதிகளில் சிலிண்டர் சப்ளைக்கு 4, 5 நாட்கள் ஆகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக சப்ளை செய்யும் காலக்கெடுவை குறைத்திட இந்தியன் ஆயில் நிறுவனம் ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. அதில், ஒரு வாடிக்கையாளர் சிலிண்டர் கேட்டு புக்கிங் செய்தால், அடுத்த 24 மணி (ஒரு நாளுக்குள்) நேரத்திற்குள் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நகரப்பகுதிகளில் உள்ள இண்டேன் காஸ் ஏஜேன்சிகள், இந்த உத்தரவை பின்பற்றி ஒருநாளுக்குள் சிலிண்டர் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இதனால், சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் சிலிண்டர் விநியோகம் ஒருநாள் அல்லது 2 நாளில் இருக்கிறது. இதனை இன்னும் வேகப்படுத்தி, ஒருநாள் என்ற நிலைக்குள் கொண்டு வர வேண்டும் என ஐஓசிஎல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய உத்தரவாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் சிலிண்டர் சப்ளை மேற்கொள்ள வேண்டும் என ஐஓசிஎல் நிர்வாகம், தங்களது ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 1.48 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு, 925 காஸ் ஏஜன்சிகள் வாயிலாக, தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

காஸ் ஏஜென்சி ஊழியர்கள், திங்கள் முதல் சனி வரை வாரத்திற்கு 6 நாட்கள் பணியாற்றி, சிலிண்டர் சப்ளையை செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்து வருகின்றனர். ஆனால் சில வாடிக்கையாளர்கள், கடைசி நேரத்தில் (சிலிண்டர் காலியான நிலையில்) புக்கிங் செய்துகொண்டு, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் சிக்கி தவிக்கின்றனர்.

அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர் சப்ளையை மேற்கொள்ள வேண்டும் என ஐஓசிஎல் நிர்வாகம் ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில் தற்போது ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியை காஸ் ஏஜென்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர்.

The post ‘‘வாடிக்கையாளர் புக்கிங் ெசய்த ஒருநாளில் கிடைக்கணும்’’ ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர்களை சப்ளை செய்ய ஏஜென்சிகளுக்கு உத்தரவு: இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : IndianOil ,Salem ,Indian Oil Company ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...