×

குடும்பத் தகராறில் விபரீதம்; பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தி தற்கொலை செய்த இளம்பெண்: கணவர், மகள்கள் கண்ணெதிரே சோகம்

சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் கணவர், மகள்கள் கண்ணெதிரே உடைந்திருந்த பீர் பாட்டிலை எடுத்து கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (32). இவருக்கும் தர்மபுரியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 11 வயதுகளில் மகள்கள் உள்ளனர். இருவரும் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் 9 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன், மனைவி பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், சேலம் எருமாபாளையத்தை சேர்ந்த தமிழழகன் (32) என்பவருக்கும், ஜெயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொண்டு, சேலம் அம்மாப்பேட்டை பூவாத்தாள் தெருவில் மகள்களுடன் வசித்து வந்தனர். தமிழழகன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தமிழழகனும் மனைவியை பிரிந்து வசித்து வந்துள்ளார். தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார்.

நேற்று மாலை போதையில் வீட்டுக்கு வந்த தமிழழகன், ஜெயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயலட்சுமி, குக்கர் மூடியால் தமிழழகனை தாக்கினார்.
இதை தொடர்ந்து அவரும் ஜெயலட்சுமியை கையால் அடித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட ஜெயலட்சுமி, சமையல் அறையில் ஏற்கனவே உடைந்திருந்த பீர் பாட்டிலை எடுத்து நான் இருந்தால்தான் பிரச்னை வருகிறது எனக்கூறி தன்னைத்தானே கழுத்தில் குத்திக் கொண்டார்.

இதை பார்த்த தமிழழகனும், அவரது 2 மகள்களும் அதிர்ச்சியடைந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் ரத்தம் அதிகளவில் வெளியேறி அவர் இறந்து விட்டார். தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தமிழழகன், அவரது 2 மகள்களிடம் விசாரணை நடத்தினர். அதில், தமிழழகன் தினமும் குடித்து விட்டு வரும் போது, ஜெயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஜெயலட்சுமியின் மூத்த மகள் மதிப்பெண் குறைந்தது குறித்து, தமிழழகன் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெயலட்சுமியை தமிழழகன் அடித்துள்ளார். இதனால் ஜெயலட்சுமி கோபித்துக் கொண்டு உடைந்த பீர் பாட்டிலை எடுத்து தன்னைத்தானே கழுத்தில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post குடும்பத் தகராறில் விபரீதம்; பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தி தற்கொலை செய்த இளம்பெண்: கணவர், மகள்கள் கண்ணெதிரே சோகம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Ammappettai ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்