×

தொட்டியம் அருகே மூதாட்டி கொலை வழக்கு 3 மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

*கொள்ளையடித்த பணத்தில் சொகுசாக வாழ்ந்தது அம்பலம்

தா.பேட்டை : திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்து பணம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மருந்து கடை நடத்தி வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் பிரியா திருமணம் முடிந்து திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மூதாட்டி ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 17.5.2023 ம் தேதி அவர் கை, கால்கள், வாய் துண்டால் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இச்சம்பவத்தில் 63 சவரன் நகைகள், ரூ. 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருச்சி போலீஸ் எஸ்.பி., வருண்குமார் உத்தரவின் பேரில் முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின் மேற்பார்வையில் ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி, முதல் நிலை காவலர் விஜயராகவன், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தொட்டியம் வள்ளுவர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்ற பில்லா (20), மணமேடு நடு தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்ற நாட்டாமை (20), தொட்டியம் அழகரை மேற்கு அர்ஜுன தெரு மோகன்ராஜ்(19), தொட்டியம் சித்தூர் தெற்கு தெரு விக்ரமன் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். இதில் கிருஷ்ணன், ஆறுமுகம், மோகன்ராஜ் ஆகியோர் கல்லூரியில் படித்து வருவதும், விக்ரமன் தனியார் வங்கி ஒன்றில் கலெக்சன் மேனேஜராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்த நகை பணத்தை கொண்டு 5 மாதமாக அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர்.

இந்நிலையில், கொலையாளிகளிடம் இருந்து 38 பவுன் நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், ஐ ஃபோன், 48 ஆயிரம் பணம், கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய ரூ.4.50 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மூதாட்டியை கொலை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வாலிபர்கள் நான்கு பேர் ஐந்து மாதம் கழித்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தொட்டியம் அருகே மூதாட்டி கொலை வழக்கு 3 மாணவர்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thaniyam ,Ambalam Tha ,Pettai ,Trichy ,Tiniyam ,
× RELATED தொட்டியம் அருகே நாகையநல்லூரில் சீதாராமன் திருக்கல்யாண உற்சவம்