×

பாஜ அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 

சாயல்குடி, அக்.11: நூறுநாள் வேலைக்கான சம்பளத்தை பாஜ அரசு குறைத்து வருவதை கண்டித்து முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் முதுகுளத்தூர் போஸ்ட் ஆபிஸ் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மயில்சாமி, ஆரோக்கிய பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது நூறுநாள் வேலைக்கான நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது.

இதனால் இத்திட்ட பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள், ஏழை – எளிய குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் தங்கபாண்டி, ராமர், சுப்ரமணி, மதன், மாவட்ட விவசாய சங்க நிர்வாகி கணேசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பாஜ அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Sayalgudi ,Mudukulathur ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!