×

மோடி முதல் கடைக்கோடி தொண்டன் வரை… பாஜவில் நவீன தீண்டாமை மாநில நிர்வாகி ராஜினாமா

கரூர்: பாஜ மாநில பட்டியலின துணைத் தலைவராக பதவி வகித்து வந்த தலித் பாண்டியன், அந்த கட்சியில் இருந்து விலகினார். அப்போது அவர், பாஜவில் மோடி முதல் கடைக்கோடி தொண்டன் வரை நவீன தீண்டாமை நிலவுவதாக குற்றம் சாட்டினார். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தலித் பாண்டியன். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வரை தலித் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் தேசிய அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2019ல் பாஜ தலைவராக எல்.முருகன் இருந்தபோது, அவரது தலைமையில் டெல்லி சென்று பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில பட்டியலின துணைத் தலைவராகவும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகள் வகித்து வந்தார்.

இந்நிலையில், பாஜவின் கொள்கை பிடிக்காமல் கடந்த 2ம் தேதி தனது கட்சி பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் விலகிக் கொள்வதாக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பி விட்டு கட்சியிலிருந்து விலகி விட்டார். இதுகுறித்து தலித் பாண்டியன் கூறுகையில், ‘பாஜவில், மோடி முதல் கடைக்கோடி தொண்டன் வரை நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பின் போது, ஜனாதிபதியையே அவர்கள் அழைக்கவில்லை இதுபோன்ற செயல்பாடுகள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால், அந்த கட்சியில் இருந்து விலகி விட்டேன். வரும் அக்டோபர் 24ம் தேதி மராட்டிய மாநிலம் நாக்பூரில் தலித் டைகர்ஸ் ஆப் இந்தியா (விடுதலை போராளிகள்) என்ற புதிய அமைப்பை தொடங்கவுள்ளேன்’ என்றார்.

The post மோடி முதல் கடைக்கோடி தொண்டன் வரை… பாஜவில் நவீன தீண்டாமை மாநில நிர்வாகி ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Modi ,Kadakodi Dontan ,BJP ,Karur ,Dalit Pandian ,Kadakodi Tondan ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?