×

கொடநாடு கொலை வழக்கு விவகாரம் இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக வழக்கின் விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றியமைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post கொடநாடு கொலை வழக்கு விவகாரம் இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thanapal ,Kodanad ,EPS ,Madras High Court ,Chennai ,Dhanapal ,Kanagaraj ,
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...