×

பொதுப்பணித்துறை இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் சார் கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

திருப்போரூர்: திருப்போரூரில் பொதுப்பணித்துறை இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து, செங்கல்பட்டு சார் கலெக்டர் லட்சுமிபதி முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருப்போரூர் ரவுண்டானா அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வளாகம் உள்ளது. இங்கு விருந்தினர் மாளிகை, வீராணம் இல்லம், பொதுப்பணி துறை அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தின் முன்பக்கம் சுமார் 4 சென்ட் மனையை தனி நபர்கள் சிலர் பொதுப்பணித்துறை இடத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டினர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சார்பில் திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் பணிகள் ெதாடங்கப்பட்டு நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அதிமுக, மதிமுக, பாமக, விசிக, மா.கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். பல்வேறு கட்சியினரும் தங்கள் கட்சிக்கொடிகளை அந்த வளாகத்தில் நட்டனர்.

இதையடுத்து, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அரசு அதிகாரிகளின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவித்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு சார் கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக நகர செயலாளர் முத்து, மதிமுக ஒன்றிய செயலாளர் லோகநாதன், பாமக மாவட்ட அமைப்புச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் ஆனந்தன்,

தேமுதிக ரமேஷ் ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இந்த பேச்சு வார்த்தையில் கலந்துக் கொண்டனர். அதேபோன்று, திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தஜோதி, இளநிலை செயற்பொறியாளர் சதாசிவம், தொல்லியல் துறை மாமல்லபுரம் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரீதர், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் இந்த பேச்சு வார்த்தையின்போது உடனிருந்தனர்.

இதில், அரசு சொத்தினை ஆக்கிரமித்து நடைபெறும் கட்டுமானப்பணி உடனடியாக நிறுத்தப்படும் என்றும், அந்த சொத்தின் பேரில் வழங்கப்பட்ட பட்டா மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து அவற்றை ரத்து செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய அரசு வழக்கறிஞரின் கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் சார் கலெக்டர் லட்சுமிபதி உறுதியளித்தார். இதையடுத்து கிராம பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தை சார் கலெக்டர் லட்சுமிபதி, வட்டாட்சியர் பூங்கொடி ஆகியோர் பார்வையிட்டனர்.

The post பொதுப்பணித்துறை இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் சார் கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Public Works Department ,Tirupporur ,Chengalpattu ,Collector ,Lakshmipathy ,Tirupporur.… ,Public ,Works ,Department ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் முதியோர் இல்லத்தினை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு