×

மதுரை அருகே பரபரப்பு எஸ்.ஐ தாக்கியதால் வாலிபர் தற்கொலை?: உறவினர்கள் போராட்டம்

வாடிப்பட்டி: மதுரை அருகே, எஸ்.ஐ தாக்கியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராம்கி (21). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராம்கியின் தாயார் போலீசில் அளித்த புகாரில், ‘கச்சைக்கட்டி பகுதியைச் சேர்ந்த ஜான்முருகன், அதிபன் ஆகியோருக்கும் எனது மகனுக்கும் முன்விரோதம் இருந்தது. இதனை மனதில் வைத்து நேற்று முன்தினம் ஊர் மந்தையில் எனது மகனை அடித்து துன்புறுத்தியதுடன், வாடிப்பட்டி காவல்நிலையத்துக்கும் தவறான தகவல் தந்துள்ளனர்.

இதன்பேரில், விசாரணைக்கு வந்த வாடிப்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ எனது மகனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த எனது மகன் வலிதாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஜான்முருகன், அதிபன், எஸ்.ஐ ஆகியோரே எனது சாவுக்கு காரணம் என எனது மகன் கடிதம் எழுதி வைத்துள்ளான். எனவே, எனது மகன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், ராம்கியின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மதுரை ஏடிஎஸ்பி கருப்பையா, சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இறந்த ராம்கியின் குடும்பத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து நேற்று மாலை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ராம்கியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post மதுரை அருகே பரபரப்பு எஸ்.ஐ தாக்கியதால் வாலிபர் தற்கொலை?: உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : SI ,Madurai ,Vadipatti ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...