×

மொபட் மீது கார் மோதி குழந்தை பலி தாய் உட்பட 3 பேர் படுகாயம் வெறையூர் அருகே

வேட்டவலம், அக்.10: வெறையூர் அருகே சாலை பணி நடைபெறும் இடத்தில் மொபட் மீது கார் மோதியதில் குழந்தை பலியானது. குழந்தையின் தாய் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த அண்டம்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டியாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்குமார்(30), வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி எழிலரசி(28), திருவண்ணாமலையில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன்கள் ரோகித்(5), வர்ஜித்(3). இந்நிலையில் எழிலரசி நேற்று முன்தினம் மதியம் மொபட்டில் தனது இரு மகன்களுடன் திருவண்ணாமலை சென்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அங்கு திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் தனியார் கல்லூரி அருகே சாலை பணி நடப்பதால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட பகுதியில் சென்றார்.

அப்போது திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சரவணன்(50) என்பவர் ஓட்டி வந்த கார், எழிலரசியின் மொபட் மீது மோதியது. இதில் எழிலரசி உட்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் வந்த சரவணனின் உறவினரான கீழ் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன்(7) என்ற சிறுவனும் படுகாயம் அடைந்தான். விபத்தை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வர்ஜித் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் குழந்தையின் தாய் எழிலரசி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், தர்ஷன் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து எழிலரசியின் மாமனார் ஆறுமுகம் வெறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ ஏசுராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மொபட் மீது கார் மோதி குழந்தை பலி தாய் உட்பட 3 பேர் படுகாயம் வெறையூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Weraiyur ,Vettavalam ,Verayur ,Patugayam ,
× RELATED உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.35...