×

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நந்தனம் கல்லூரி விடுதியில் இருதரப்பு மாணவர்கள் மதுபோதையில் மோதல்: 3 பேர் படுகாயம், பொருட்கள் சேதம், போலீசார் விசாரணை

சென்னை: பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, நந்தனம் கல்லூரி விடுதியில் இருதரப்பு மாணவர்களிடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில், 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலையில் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள மாணவன் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதனால் சக மாணவர்கள் விடுதியில் உள்ள அறையில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது மாணவர்கள் சிலர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம் மாணவர் விடுதியில் முன்னாள் மாணவரான சந்தோஷ் என்பவரை சக மாணவர்கள் தங்க வைத்துள்ளனர். இதற்கு ஒரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, இந்த பிரச்னையை ஒரு தரப்பு மாணவர்கள் எழுப்பியுள்ளனர். இதனால் பிறந்த நாள் கொண்டாடிய மாணவர் குழுவுக்கும், மற்றொரு மாணவர் குழுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு மாணவர்கள் மது போதையில் சக மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.

இதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். விடுதியில் இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் நந்தனம் கல்லூரி விடுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்களை சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோதல் தொடர்பாக போலீசார் விடுதி காப்பாளர் மற்றும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், மாணவர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் விடுதி முன்பு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நந்தனம் கல்லூரி விடுதியில் இருதரப்பு மாணவர்கள் மதுபோதையில் மோதல்: 3 பேர் படுகாயம், பொருட்கள் சேதம், போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nandanam college ,CHENNAI ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...