திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில், உலக மூளை முடக்குவாத தினம் கடைபிடிக்கப்பட்டது. திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில், உலக மூளை முடக்குவாத தினத்தையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கான தொடர்பு அணுகல் மற்றும் கற்பித்தல் பற்றிய தேசிய அளவில் காணொலி மூலம் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் லக்னோவில் இயங்கும் ஸ்பார்க் இந்தியா நிறுவன நிறுவனர் மற்றும் இயக்குனர் அமிதாப் மல்ஹோத்ரா கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கு, பெருமூளை முடக்கு வாதத்தின் ஆரம்பகால தலையீடு மற்றும் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் நடந்தது.
அதேபோல், மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், நிறுவன இயக்குநர் நசிகேதா ரவுட், துணைப்பதிவாளர் (பொறுப்பு) அமர்நாத், அலுவலர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திருப்போரூர் ஒன்றியத்தில் உலக மூளை முடக்குவாத தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.