திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலகத்தில், வட்டார சுகாதார பேரவை ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கம், செம்பாக்கம், சிறுங்குன்றம், மானாம்பதி ஆகிய 4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இத்துறை சார்பில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு, மருத்துவ சேவை மற்றும் தொற்று நோய்களின் அபாயங்களில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேலும் சுகாதார வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. வட்டார சுகாதார பேரவை சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர்கள் கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், படூர் தாரா சுதாகர், கோவளம் சோபனா தங்கம் சுந்தர், பொன்மார் நாராயணன் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளுக்கு தேவையான சுகாதார வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்து பேசினர்.
இந்த, சுகாதார பேரவை குழுவின் மூலம் கிராம மக்களின் சுகாதார தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. அதன் அறிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு அனுப்பி தேவையை பூர்த்தி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதேபோல், சுகாதார பேரவை மூலம் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கட்டடம், சுற்றுச்சுவர் போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
The post வட்டார சுகாதார பேரவை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.