×

காவல் நிலையம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா

*பணம் செலுத்தியும், கிரையம் செய்து கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அவிநாசி : அவிநாசி அருகே முன் பணம் செலுத்தியும், கிரையம் செய்து கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவிநாசி காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகே எம். நாதம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்தாஸ் (42). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (32). இவரது மகள் ஜெஸ்மி (12), மகன் பிரித்வ் (6). இவர் அதே பகுதியில் தனியார் அமைத்திருந்த வீட்டுமனை பிரிவுக்கு முன் பணம் செலுத்தியும், கிரையம் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளனர். அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருள்தாஸ் தனது குடும்பத்தினருடன் அவிநாசி காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து அருள்தாஸ் கூறியதாவது: எம். நாதம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டு மனை பிரிவில் 47வது எண் கொண்ட வீட்டு மனையை பதிவு செய்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ரூ.4.50 லட்சம் பணம் செலுத்தினோம். ஆனால், வீட்டுமனை பிரிவு உரிமையாளர் இது வரை கிரையம் செய்து கொடுக்கவில்லை. இதற்கு மாறாக நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டதற்கு இரு முறையும் செல்லாத காசோலைகளை கொடுத்தார்.

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக நாங்கள் செலுத்திய பணத்தையும் திருப்பி கொடுக்காமல், அந்த வீட்டுமனை பிரிவில் கிரையம் கொடுக்காமல் எங்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அவிநாசி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வீட்டுமனை பிரிவு உரிமையாளரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்களுக்குள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

 

The post காவல் நிலையம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Tarna ,Avinasi ,Dinakaraan ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...