×

பழநி மலைக்கோயில் வந்த பக்தர்கள் மகிழ்ச்சி 50 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரோப்கார் சேவை

பழநி : பழநி மலைக்கோயிலில் 50 நாட்களுக்கு பிறகு ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முதன்மையானதாக உள்ளது. பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்களும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி துவக்கப்பட்ட ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடமாகும். ரோப்காரில் ஒரு மணி நேரத்தில் சுமார் 450 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்காரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஷாப்ட் இயந்திரம் பழுதானது.

இதனைத்தொடர்ந்து வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. புதிய ஷாப்ட் இயந்திரம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற சீரமைப்புப்பணிகளும், பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஞ்சாமிர்த டின்களை அடுக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர், வல்லுநர் குழுவின் ஒப்புதல் கிடைத்ததன் காரணமாக 50 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.நேற்று அதிகாலை ரோப்கார் பெட்டி மற்றும் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

பூஜையில் பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் உற்சாகத்துடன் பயணிக்க துவங்கினர். ரோப்கார் நிலையத்தின் முன்புறம் செல்போன் பாதுகாப்பு மையமும் நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரோப்கார் நிலையத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் நேற்று ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 50 நாட்களுக்கு பிறகு ரோப்கார் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பழநி மலைக்கோயில் வந்த பக்தர்கள் மகிழ்ச்சி 50 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரோப்கார் சேவை appeared first on Dinakaran.

Tags : Palani Malaiko ,Phalani ,Robkar ,Phalani Malaikoyl ,Tamil Nadu ,Dinakaraan ,
× RELATED பழனி பாலாறு பொருந்தலாறு அணையில்...