×

வேலைவாய்ப்பு முகாமில் 213 பேருக்கு பணி நியமன ஆணை

திருச்செங்கோடு, அக்.8: திருச்செங்கோட்டில், 121 நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாமில் 213 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை வகித்தார். ஈஸ்வரன் எம்எல்ஏ, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பாதுகாப்பாக சூழலை ஏற்படுத்தியதன் விளைவாக மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் வெகுவாக முன்னேறி வருகிறது. 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகள் ஈட்டிடும் வகையிலும், இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையிலும் வரும் 2024 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறவுள்ளது.

தொழில் துறையில் முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாடு தொழில் வழிகாட்டி முகமைக்கு விருது கிடைக்க பெற்றுள்ளது. மேலும், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்திட நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு-குறு தொழில் தொடங்கிட மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை முதலமைச்சர் வழங்கி ஊக்குவித்து வருகிறார். இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த முகாமில் 121 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 1800க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய 213 நபர்கள் தேர்வாகியுள்ளனர்.

மேலும், இளைஞர்கள் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் பேசினார். தொடர்ந்து, மகளிர் திட்டம் சார்பில் 37 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹3.62 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தங்கவேல், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வேலைவாய்ப்பு முகாமில் 213 பேருக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Minister ,Mathiventhan ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி