×

அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி,அக்.8: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை ஏற்படுத்தும் வகையில், அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி, நேற்று தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் சாந்தி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு, அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, தேவரசம்பட்டி வரை சென்று, மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, அதியமான் கோட்டம் வரை சென்று, மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 17 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும் தனித்தனியாக நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ₹5000, 2ம் பரிசாக ₹3000ம், 3ம் பரிசாக ₹2000ம், நான்கு முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு தலா ₹1000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் சாந்தி வழங்கினார். நிகழ்ச்சியில் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ, ஆர்டிஓ கீதாராணி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா, வக்கீல் மணி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன், ராஜா, கவுதம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Anna Marathon Race ,Dharmapuri ,Dharmapuri District Sports Development Authority ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...