தாம்பரம், அக்.8: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.35.41 கோடி மதிப்பீட்டில் 377 தார் சாலைகள் மற்றும் 62 கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இச்சாலைகள் அனைத்தும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, தரமான சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையர் அழகு மீனா தலைமையில், உயர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களை கொண்ட குழுவினரால் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யப்படுகிறது.
அதன்படி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.16 கோடி மதிப்பீட்டில் 159 தார்சாலைகள் மற்றும் 33 கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 350 சாலை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதேபோல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் 6 தார்சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 சாலை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5 மண்டலங்களில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் 241 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளில் 212 தார்சாலைகள் மற்றும் 29 கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 298 சாலை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வருகின்ற சாலை பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.35.41 கோடி மதிப்பீட்டில் 439 சாலை பணி நிறைவு: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.