×

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல சோதனை கருவி இஸ்ரோ விஞ்ஞானியிடம் ஒப்படைப்பு

சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல திட்ட சோதனை கருவி இஸ்ரோ விஞ்ஞானியிடம் ஒப்படைக்கப்பட்டது. இஸ்ரோ இந்திய விண்வெளி ஆய்வு மையம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்கு அழைத்துச் சென்று மீண்டும் பூமிக்கு அழைத்து வர விண்கலத்தில் இடம்பெறும் இன்டெகிரேட் ஏர் டிராப் டெஸ்ட் குரூப் மாடல் எனப்படும் கட்டமைப்பின் மாதிரியை திருவொற்றியூரை சேர்ந்த கேசிபி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மாதிரியை கேசிபி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் வி.எல்.இந்திராதத், ககன்யான் திட்ட இயக்குனர் இஸ்ரோ விஞ்ஞானி அட்டனிடம் ஒப்படைத்தார். அப்போது, கேசிபி திட்ட அதிகாரி கூறியதாவது:ககன்யான் விண்கலத்தில் முக்கிய அங்கமாகிய மனிதர்கள் பாதுகாப்பாக இருக்கும் ஏர் டிராப் டெஸ்ட் குரூப் மாடல் கட்டமைப்பின் இரு மாதிரிகளை தயாரித்து வழங்கும் பணியில் கேசிபி நிறுவனம் ஈடுபட்டது. விண்வெளியில் இருந்து வீரர்கள் இந்த கட்டமைப்பு உதவியுடன் பாதுகாப்பாக கடலில் தரை இறங்குவர்.

அந்த கட்டமைப்பின் மாதிரி அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர்தர உலோகங்களால் 3.10 டன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2.60 மீட்டர் உயரமும், 3.1 மீட்டர் விட்டமும் உடையது. பாதுகாப்பு மற்றும் உறுதியானதாகவும், வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் தன்மை உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டமைப்பை உருவாக்க 1.60 கோடி ரூபாய் செலவாகிறது. ஒரு கட்டமைப்பு தற்போது திருவொற்றியூரில் உள்ள கேசிபி ஆலையிலிருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. மற்றொன்று, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பை பயன்படுத்தி இஸ்ரோ பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொள்ளும். 18 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

The post மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல சோதனை கருவி இஸ்ரோ விஞ்ஞானியிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,CHENNAI ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...