×

மதுராந்தகம் அருகே பரபரப்பு கல்குவாரி வாகனங்களை சிறைபிடித்து கிராமமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

 

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் மற்றும் விழுதமங்கலம் கிராமங்களில், இரு கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்வதும், லாரிக்கு மேல் தார்ப்பாய் போடாமலும், அதிவேகமாகவும் செல்வதால், புழுதி காற்று வீசி இப்பகுதியில் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுவதாக கிராம மக்களிடையே குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இந்த கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்குவாரிக்கு செல்லும் 20க்கும் மேற்பட்ட லாரிகளை நேற்று காலை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த அணைக்கட்டு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, கிராம மக்கள் விதிகள் மீறி இயங்கும் இக்குவாரிகளை மாவட்ட அளவிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். காவல் துறையினர் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த மறியலால் தச்சூர் – பூதூர் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.

The post மதுராந்தகம் அருகே பரபரப்பு கல்குவாரி வாகனங்களை சிறைபிடித்து கிராமமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Busy Kalquari ,Madhuranthakam ,Seyyur ,Thachur ,Viluthamangalam ,Madhurandakam ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...